தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பௌத்தர்களின் பிக்கு பிக்குணியர்களின் சங்கம் பீடமேற்றுக் கொண்டது. சேலத்திற்கு அருகே உள்ள தியாகனூரில் 14.05.2023 அன்று இம்மாநாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட பௌத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
தியாகனூர் மாநாடு சேலம் மாவட்டம் பண்டைய காலத்தில் மகதை நாடு என்று அழைக்கப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி பெரம்பலூர் மாவட்டம் சேலம் ஆகிய பகுதிகள் அக்காலத்தில் இணைந்து இருந்தன. பௌத்தம் செழித்தோங்கி இருந்த அந்த பகுதியில் ஏராளமான பௌத்த சின்னங்கள் கிடைத்தபடி உள்ளன. அவற்றுள் முக்கியமானது தியாகனூரில் கிடைத்துள்ள மாபெரும் பௌத்த சிலையாகும். அமர்ந்த நிலையில் உள்ள இந்த புத்தரின் சிலை எட்டடி உயரம் கொண்டதாக விளங்குகிறது. அந்த ஊரில் இரண்டு புத்தர் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த சிலைகள் அமைந்துள்ள ஊரை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சங்கத்தின் தொடக்க விழாவிற்காக தேர்வு செய்தது. ஏற்கனவே காஞ்சியில் நடந்த சங்கரத்தினர்கள் அறிமுக விழாவில் தீர்மானிக்கப்பட்டபடி பிக்கு சங்கம் அறிமுகம் மற்றும் பௌத்த மறுமலர்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி ஆறு மாதத்திற்கு மேலாக நடைபெற்றன.
மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன். சிறுபான்மை ஆணைய தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ். சட்டமன்ற உறுப்பினர் திரு சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட கலர் அழைக்கப்பட்டனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் பௌத்த இயக்கங்கள், புத்த விகாரின் பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டு படி மாநாட்டின் வேலைகள் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கின. பிக்குமார்கள் இரவே வந்து மாநாட்டு திடலில் தங்கி பணிகளை மேற்பார்வையிட்டனர்.
14.05.2022 அன்றுக் காலை 6 மணிக்கு எல்லாம் கூட்டம் கூடி விட்டது. வந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பிறகு அனைவரும் தியாகனூரில் உள்ள முதல் புத்தர் கோயிலை அடைந்தன. அங்கே அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு பிக்குகளுக்கு புது சீவரம் வழங்குவதற்கான சீர்வரிசை தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் புத்தரின் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதற்கிடையில் மாநாட்டு திடல் நோக்கி ஏராளமான வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. திடல் இரண்டு பக்கமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வந்தவர்களின் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. வந்தவர்கள் அனைவரும் இறங்கி முதல் பூசை நடைபெறுகின்ற இடத்தில் குழுமத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்து ஒன்பது மணிக்கு பிக்குகளின் பேரணி தொடங்கியது. வரிசையாக ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நிற்க முதலாம் நபராக சங்காதிபதியாக பொறுப்பேற்கும் உள்ள தமர்சீலர் நிற்க. அவருடன் கௌதம் சன்னா, திருநாவுக்கரசு, எஸ்.வசந்த், பார்த்திபன். போதிச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தனர், தம்மவலம் தொடங்கி மாநாட்டு பந்தலை அடைந்தது. அங்கே புதிதாக கட்டப்பட்ட புத்தர் கோயிலில் உள்ளும் வெளியும் அனைவரும் அமர்ந்தனர். கோயிலுக்குள் புத்தர் சிலை அருகில் வண.பிக்குகள் அமர்ந்தனர். எதிரே பிற மாநிலங்களில் இருந்து வந்த பிக்குகளும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை நிர்வாகிகளும் அமர்ந்தனர். கயாவிலிருந்து வந்திருந்த வணக்கத்திற்குரிய பிக்கு நாகபூஷனம் அவர்கள் புத்த வணக்கத்தைத் தொடங்கினார். புத்தரின் சிலை முன்பு ஏற்கனவே முக்கோல் வைக்கப்பட்டிருந்தது. அந்த கோல் கோயிலின் நடுவில் வைக்கப்பட்டு திரிசரணம் பஞ்சசீலம் மற்றும் மங்கள சூத்திரங்கள் ஓதப்பட்டன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் வெளியிலே நாதஸ்வரம் மற்றும் மங்கள மேளம் இசைக்கப்பட்டது. இறுதியாக முக்கோல் மங்கள அரிசி மற்றும் மலர்கள் வைக்கப்பட்ட ஒரு தட்டில் முக்கோல் வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அரிசியையும் மலரையும் கையில் எடுத்துக்கொண்டு முக்கோலை வணங்கி மீண்டும் கோயிலுக்குள் அனுப்பி வைத்தனர்.
மீண்டும் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்ட முக்கோல் குறித்து கௌதம சன்னா சிறிய உரை ஆற்றினார். 800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் துடைத்தெரியப்பட்ட பௌத்தம் பிக்குகள் இல்லாத காரணத்தினால் ஒரு மதமாக இயங்க முடியாது நிலை இருந்தது. எனவே அந்த மதத்தை 800 ஆண்டுகள் வெகுமக்கள் பாதுகாத்து இன்றைக்கு வண.பிக்குகளிடம் வழங்குகின்றனர். எனவே அக்காலத்தில் பிக்குகள் தங்களது கைத் துணையாக வைத்திருந்த முக்கோல் என்பது குறியீடாக வைக்கப்பட்டு அதனுடன் தம்மப்பதமும் வைக்கப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டு, மக்களின் சார்பாக மக்களிடம் இருந்து பிக்குகளுக்கு கைமாற்றி தரப்படும் நிகழ்வாக இது அமைகிறது என்பதை விளக்கினார்.
பிறகு நாகபுஷணம் அவர்கள் மங்கள சுத்தம் முழங்க, நாதஸ்வரம் மேளதாளம் இசைக்க அனைவரும் மங்கள அரிசியை தூவ மக்களின் சார்பாக கௌதம சன்னா மற்றும் தோழர்கள் தலைமை சங்காதிபதியிடம் முக்கோலை சங்கம் முறைப்படி இயங்கும் என்பதன் குறியீடாக வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்ட வணக்கத்திற்குரிய தம்மசீலர் அவர்கள் அவற்றை மக்களிடம் காட்டி சங்கம் உருவானது என்பதை முறைப்படி அறிவித்தார். அதற்குப் பிறகு மாநாட்டு மேடைக்கு பிக்குகள் அனைவரும் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு மேடையில் அமர வைக்கப்பட்டனர். பிக்குகளிடம் கொடுக்கப்பட்ட அடையாளச் சின்னமான முக்கோல் மேடையில் வைக்கப்பட்டிருந்த புத்தரின் சிலை முன்னால் வைக்கப்பட்டது. பிறகு மாநாடு முறையாக தொடங்கியது.
மாநாட்டிற்கு வருகைத்தந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உரை நிகழ்த்தினார்கள். இடையிடையே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியை நிறைவில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை உரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் திரு.சிந்தனை செல்வன் வாழ்த்துரை வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் நிறைவு பேருரை ஆற்றினார். அதன் பிறகு மாநாடு நிறைவு பெற்றது.
இம் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு தீர்மானத்தையும் பேரவையில் உள்ள ஒருவர் வாசித்தார். அவற்றில் சரி பாதி பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சங்கரத்தினர்கள் அனைவருக்கும் பிக்கு சங்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் நூல் வழங்கப்பட்டது.
மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் சிறப்பை ஆற்றினார்கள். தமிழ்மரபுஅறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுபாஷினி, டாக்டர் கண்ணன் நாராயணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் பணியாற்றி வரும் டாக்டர் தேன்மொழி அவர்கள் எழுதிய தமிழகத்தில் பௌத்தம் என்கின்ற நூலை டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள் வெளியிட சிந்தனை செல்வன் அவர்கள் பெற்றுக் கொண்டார். காலை முதல் இரவு வரை நடைபெற்ற இப்பெரும் நிகழ்ச்சியில் சுமார் 20000 பேர் கலந்து கொண்டனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி மாநாட்டின் சிறப்புரை செய்தனர். இந்நிகழ்வு 800 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பௌத்த சங்கம் மீண்டும் உயிரோட்டப்பட்டு நிறுவப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்பெருமையை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை சாதித்தது என்பது சிறப்பிற்குரியது.
தீர்மானங்கள்
நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள்
- இந்தியாவை தம்மத்தின் ஒளியில் சிறப்புறச் செய்து, உலகில் அன்பையும் அகிம்சையையும் நிலைநாட்டி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் உணர போதித்த ஆசிய ஜோதி பகவன் புத்தர் அவர்களை நன்றியுடன் இம்மாநாடு வணங்குகிறது.
- புத்தருக்குப் பிறகு இந்தியாவில் பௌத்தத்தை நிலைபெறச் செய்த சாம்ராட் அசோகர், திருவள்ளுவர், மாமன்னர் கனிஷ்கர், ஆச்சார்யா தர்மபாலர், ஜென் பௌத்த நிறுவனர் போதி தருமர், ஆச்சார்ய நாகார்சூனர், 20ஆம் நூற்றாண்டில் பௌத்த தம்மத்தை நிலைபெறச் செய்த மகா பண்டிதர் அயோத்திதாசகர், புத்த கயாவை மீட்டெடுத்த அனகாரிக தர்மபாலர், பௌத்த தத்துதுவ பேராசிரியர் லட்சுமி நரசு, பௌத்தத்தை மீட்டு இந்தியா முழுமைக்கும் மக்கள் மயப்படுத்திய போதி சத்துவர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெயர் தெரியாமல் பணியாற்றிய அனைத்து முன்னோடிகளையும் இம்மாநாடு நன்றியோடு நினைவேந்துகிறது.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமை மத அமைப்புத் தீர்மானம்
- தமிழ்நாட்டில் மறைந்து போன தமிழ்நாட்டு பௌத்தர்கள் தலைமை மத அமைப்பு 800ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகா சங்காதிபதியின் தலைமையில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை என்னும் பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதை பெருமையோடு அறிவிக்கிறோம். இத்தலைமை அமைப்பு தமிழ்நாடு பௌத்தர்களின் அனைத்து மத நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும். அனைத்து பௌத்த அமைப்புகளையும் அவ்வமைப்புகளின் தனித்தன்மைகளை பாதுகாத்து அரவணைத்து தம்ம பரவலில் ஈடுபடும் என்பதையும் இம்மாநாட்டின் மூலமாக அறிவிக்கிறோம்.
- தமிழ்நாடு பௌத்தர்கள் அனைவரும் தமக்கான மத அமைப்பின் ஏற்று அங்கீகரித்து பிற சிறுபான்மை மதத்தவர்கள் எப்படி தங்களின் மத அமைப்பினை மதித்து பின்பற்றுகிறார்களோ அதைப்போல நம் மத அமைப்பின் பின்பற்றி பௌத்த மதமேற்பு, திருமணம், பிறப்பு, இறப்பு, புத்தத் திருக்கோயில்கள் வழிபாடு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே சீரான முறையில் பின்பற்ற முன்வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அதற்கென உருவாக்கப்பட்டுள்ள tnbsc.in இணையத் தளத்தில் பௌத்த குடிமக்கள் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளும்படி இம்மாநாட்டின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
- தமிழ்நாட்டில் உள்ள பௌத்த வழிபாட்டிடங்கள் விகார் அல்லது விகாரைகள் என்று பாலி மொழியில் அழைக்கப்படுகின்றன. இனி அவை அரசன் எனப் பொருள்படும் கோ என சித்தார்த்தரின் தம்மம் வசிக்கும் இல் எனும் பொருளில் கோஇல் என அழைக்கப்பட்டது. அந்தப் பண்டைய முறையினைப் பின்பற்றி அனைத்து பௌத்த விகாரைகளும் இனி அடைமொழி சேர்த்து புத்தர் திருக்கோயில், தம்ம ஆலயம், புத்தர் ஆலயம் அல்லது புத்த சேத்தியம் என அழைக்கப்படும் என்பதை இம்மாநாடு மூலமாக அறிவிக்கிறோம். உதாரணம். தியாக புத்தர் திருக்கோயில் தியாகனூர்.
விகார் அல்லது திருக்கோயில் வழிபாடு ஒருங்கிணைப்பு
- மேற்கண்ட அமைப்பில் உருவாக்கப்படும் பிக்கு பிக்குனிகள், மற்றும் புத்த பூசகர்கள் மக்களிடையே புத்தரின் தம்மத்தை பரப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேரப் பள்ளிகள், மருத்துவ முகாம்கள், கிராம தற்காப்புக் கலைகள், சுற்றுப்புறச் சூழல் தூய்மை மேம்பாடு, மரங்களை வளர்த்தல், மக்களுக்குப் பொருளாதார மேம்பாட்டு ஆலோசனைகளை அளித்தல், மற்றும் சக உயிர்களிடத்தில் அன்பை பராமரித்தல் ஆகியவற்றினை தொடர்ந்து முன்னெடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் பௌத்த தம்ம பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்கப்படும். திரிசரணம், பஞ்சசீலம், எண்வழிப்பாதை ஆகியவற்றை பயிற்றுவிப்பதுடன் அம்பேத்கர் எழுதிய புத்தமும் அவர் தம்மமும் மற்றும் பண்டிதர் எழுதிய ஆதிவேதம் ஆகியவற்றினை அனைத்து புத்தர் திருக்கோயில்களிலும் ஒவ்வொரு ஞாயிறுற்றுக் கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் அல்லது மாலை 6 முதல் 8 மணி வரையிலும் வழிபாடு நடத்தி தம்மத்தினை போதிக்க வேண்டும். அந்நேரத்தில் பண்டைய புத்த வணக்கப் பாடல்கள் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் தொகுத்த புத்த பாடல்களும் பாடப்பட வேண்டும் என்கிற நடைமுறையினை பேரவை அறிவிக்கிறது. அதை அனைத்து புத்தத் திருக்கோயில்களும் பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு நன்றித் தெரிவித்தல்
- அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி மத மோதல்கள் ஏற்பாடாவண்ணம், சமூகத்தில் மக்களிடையே உருவாகியிருக்கும் சாதி மற்றும் மத அடிப்படையிலான பதட்டங்களைத் தணித்து மக்கள் மன அமைதி பெறவும், வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழவும், சிறுபான்மை மத சமூகத்தின்ர் பாதுகாப்புடன் வாழவும் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டினை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் எழுச்சித் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கும், சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கும் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும் இம்மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசிற்கு முன்வைக்கும் கோரிக்கைத் தீர்மானங்கள்
- சமணம் என்கிற பொதுச் சொல் பௌத்தம், ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய அமண மதங்களைச் குறிக்கும் சொல் ஆகும். இச்சொல்லை ஜைனத்தை மற்றும் குறிக்கும் சொல்லாகப் பயன்டுத்தாமல் இம்மதங்களின் தனித்தன்மையினை காக்கும் வகையில் அந்தந்த மதங்களின் பெயரிலேயே அங்கீகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் ஜைன மதத்தினை வைத்து பாதுகாத்து உதவிகளைச் செய்வது போல, பௌத்த மதத்தையும் கொண்டு வர வேண்டும். அதை அத்துறையின் கீழ் தனியாக ஜைன – பௌத்த அறநிலையப் பிரிவு என அடையாளப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறுபான்மையினர் ஆணையங்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களை பெரும்பாலும் கண்டுக் கொள்வதில்லை. எனவே இந்த சிறுபான்மையினர் ஆணையங்கள் மாற்றப்பட்டு, அவை நேரடியாக பௌத்த சிறுபான்மையினர் ஆணையம், ஜைன சிறுபான்மையினர் ஆணையம், கிறுத்துவர் சிறுபான்மையினர் ஆணையம், இசுலாமியர் சிறுபான்மையினர் ஆணையம் என பிரிக்கப்பட்டு ஓர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறையாக மாற்றப்பட வேண்டும் எனவும், பௌத்தர்கள் தமது சிறுபான்மையின அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பெறுவதற்கும் தகுந்த சட்டப்பாதுகாப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது..
- பௌத்த – ஜைன மதத்தவர்களுக்கென தனியாக நல வாரியம் ஒன்றை அமைத்து அவர்களின் மேம்பாட்டிற்கு உதவ தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மேலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்க்ளை நடத்த அரசு உதவி செய்வதைப் போல பௌத்த மதச் சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்திட தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையினர் நல நிதியத்தை உருவாக்கி பௌத்த சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது சமூக அரசியல் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் கல்வி மற்றும் மருத்துவ அமைப்புகளை உருவாக்கி மக்களுக்குப் பணியாற்றும் வகையிலும் தேவைப்படும் நிதி உதவிகளை மேற்கண்ட நிதித்தொகுப்பிலிருந்து பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், வங்கிக் கடன்களைப் பெறுவதில் இவர்களுக்கு சிறப்பு முன்னுரிமையை அளிக்க வகை செய்யும் படியும் மத்திய அரசினை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் தலைமையில் வழிகாட்டலில் இயங்கத் தொடங்கியுள்ள தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பான தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையினை தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சீரோடும் சிறப்போடும் இயங்கும் தமிழ்நாடு அரசிற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
- தமிழகத்தில் உள்ள பௌத்தத் துறவிகளான பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கு பிட்சையேற்று தம்மப் பணியாற்றும் கடமையில் இருக்கின்றனர். அவர்களுக்கென தனி வருமானம் கிடையாது, எனவே அவர்கள் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் இலவசமாக பயணிக்க தேவையான அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கிராமப் பூசாரிகளுக்கு மாதாமாதம் வழங்கப்படும் சிறு ஊதியம் போல தமிழ்நாட்டு பௌத்த பிக்கு பிக்குணிகளுக்கும், புத்த திருக்கோயில்களை பராமரிக்கும் புத்த பூசகர்களுக்கும் மாத நிதி நல்கையினை தமிழ்நாடு அரசு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- பௌத்த நாடுகளில் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் தொண்மையான பௌத்த தலங்களுக்கு வர விரும்புகின்றனர். ஆனால் அதற்கான உரிய தெளிவான வழிக்காட்டுதல்கள் இல்லை. எனவே தொண்மையான பௌத்த தலங்களை சுற்றுலாத்துறையின் பட்டியலில் இணைத்து மேம்படுத்த உதவுவதின் மூலமாக தமிழகத்திற்கு சுற்றுலாத் துறையின் மூலம் அதிக வருமானத்தினை ஈட்ட முடியும். எனவே தமிழ்நாட்டு பௌத்த திருத்தலங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- பௌத்தர்கள் விகாரைகள் மற்றும் புத்த திருக்கோயில்களில் நடைபெறும் பௌத்தத் திருமணங்களை அங்கீகரிக்கும் விதமாக பௌத்தத் திருமணச் சட்டம் ஒன்றையோ அல்லது தேவையான சட்ட வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- தமிழக அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த தெய்வங்களின் சிலைகளை அருங்காட்சியகங்களில் வைப்பதின் மூலம் மக்கள் பார்வையிலிருந்து அவை விலக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அவை கிடைத்த இடங்களில் முறையாக சிறு வழிபாட்டு சேத்தியங்களைக் கட்டி அவற்றை அங்கே பராமரிக்க வேண்டும் என்றும், மக்கள் வழிபாட்டிற்கு அவற்றை மீண்டும் கொண்டு வர உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- தமிழகத்தில் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் மற்றும் சிதலமடைந்து கிடக்கும் புத்தரின் சிலைகளையும், புத்த சிறு தெய்வங்களின் கோயில்களையும் அடையாளங்கண்டு, அவற்றை ஒரு தகவல் தொகுப்பாகத் தொகுத்து வைக்கவும் அவற்றுக்கான வரலாற்று ஆதாரங்களைத் திரட்டி உலகின் முன் கொண்டு வரவும் தேவைப்படும் முயற்சிகளையும் இணைய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட புத்தரின் சிலைகளைக் கொண்டு சிறு விகாரைகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு பௌத்த அன்பர்கள் முன்வர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- நாகையில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவை ஆண்டு ஸ்ரீவிஜய மன்னர் ராசராச சோழனின் உதவியோடு கட்டிய சூடாமணி விகாரை தென்கிழக்காசிய நாடுகளோடு தமிழகத்தை இணைக்கும் மையப் புள்ளியாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்த அந்த விகாரையினை பிரிட்டிஷ்காரர்கள் இடித்து விட்டார்கள். பிறகு அந்த இடத்தில் நடந்த அகழ்வாய்வில் 350 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் மக்கள் பார்வைக்கு இன்னும் வைக்கப்படவில்லை. எனவே அவை உடனடியாக தனி அரங்கில் காட்சிக்கு வைக்க ஆவணச் செய்ய வேண்டும்.
- காஞ்சி புத்தர் கோவிலுடன் இணைத்து, உலகப் புகழ்பெற்ற தமிழக ஜென் பௌத்த துறவியான போதிதர்மருக்கு, உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நினைவு மண்டபம் (14 ஏக்கர் நிலப்பரப்பில்) அமைப்பதற்கான திட்டம் ஒன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கை அரசு ஒப்புதலுக்காக சுற்றுலாத்துறையில் நிலுவையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த திட்டத்தை தங்களின் பெரு முயற்சியினால் செயல்படுத்திட வேண்டும்.
அறைகூவல்
இந்தியத் துணைகண்டத்தில் ஆசிய ஜோதி பகவான் புத்தர் உருவாக்கிய தம்மப்பேரொளி இத்துணைக்கண்ட மக்களையும் மற்றும் உலகத்தின் ஏராளமான நாடுகளைச் சேர்ந்த மக்களையும் நல்வழிப்படுத்தி சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கியிருக்கிறது. அந்த நற்சூழல் இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் இம்மாநாட்டின் பணிகளோடு தங்களின் கைகளைக் கோர்க்க வேண்டும் என அனைவருக்கும் அறைகூவல் விடுத்து அன்பெனும் ஒரு குடையின் கீழ் உலகத்தினை கொண்டு வரும் நோக்கில் அணிவகுப்போம் என்றும் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.